திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
மாயிரு ஞால மெல்லாம்
    மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்
    படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த
    கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
1
மடந்தை பாகத்தர் போலும்
    மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலும்
    கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்
    காலனைக் காய்வர் போலுங்
அடைந்தவர்க் கன்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
2
உற்றநோய் தீர்ப்பர் போலும்
    உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்
    தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்
    கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
3
மழுவமர் கையர் போலும்
    மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்
    என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்
    தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
4
பொடியணி மெய்யர் போலும்
    பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்
    காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்
    வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
5
வக்கரன் உயிரை வவ்வக்
    கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்
    தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்
    துளரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்
    ஆவடு துறைய னாரே.
6
விடைதரு கொடியர் போலும்
    வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்
    பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்
    உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்
    ஆவடு துறைய னாரே.
7
முந்திவா னோர்கள் வந்து
    முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்
    நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்
    திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்
    ஆவடு துறைய னாரே.
8
பானமர் ஏன மாகிப்
    பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்
    திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த
    திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்
    ஆவடு துறைய னாரே.
9
பார்த்தனுக் கருள்வர் போலும்
    படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர
    இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்
    கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்
    ஆவடு துறைய னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.57 திருஆவடுதுறை - திருநேரிசை
மஞ்சனே மணியு மானாய்
    மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று
    நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து
    துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்
    ஆவடு துறையு ளானே.
1
நானுகந் துன்னை நாளும்
    நணுகுமா கருதி யேயும்
ஊனகந் தோம்பும் நாயேன்
    உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த
    தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே
    ஆவடு துறையு ளானே.
2
கட்டமே வினைக ளான
    காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்
    பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே
    ஆவடு துறையு ளானே.
3
பெருமைநன் றுடைய தில்லை
    யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி
    உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்
    கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட
    ஆவடு துறையு ளானே.
4
துட்டனாய் வினைய தென்னுஞ்
    சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து
    கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை
    மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்
    ஆவடு துறையு ளானே.
5
காரழற் கண்ட மேயாய்
    கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே
    யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே
    நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்
    ஆவடு துறையு ளானே.
6
செறிவிலேன் சிந்தை யுள்ளே
    சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்
    கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்
    நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்
    ஆவடு துறையு ளானே.
7
கோலமா மங்கை தன்னைக்
    கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்
    செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை
    நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட
    ஆவடு துறையு ளானே.
8
நெடியவன் மலரி னானும்
    நேர்ந்திரு மாலும் தேடக்
கடியதோர் உருவ மாகிக்
    கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே
    என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்
    ஆவடு துறையு ளானே.
9
மலைக்குநே ராய ரக்கன்
    சென்று மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே
    தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி
    ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்
    ஆவடு துறையு ளானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com